அண்ணா யுனிவர்சிட்டியில் படிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான +2 மாணவர்களின் லட்சியம்.
இதற்கான விண்ணப்பங்களை எங்கே வாங்கலாம்? கட் ஆஃப் மார்க்கை கணக்கிடுவது எப்படி?
சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவது உண்மையா?
எத்தனை மதிப்பெண் வாங்கினால் சீட் கிடைக்கும்? என்று மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தெளிவாக இங்கே பதில் சொல்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் மன்னர் ஜவஹர்.
“தமிழகம் முழுவதும் 554 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அதில் நான்கு உறுப்புக் கல்லூரிகள், அரசு, அரசு மானியம் பெறும் கல்லூரிகள் அடக்கம். அண்ணா பல்கலையில் படிக்கணும்கிறதுதான் அனைத்து மாணவர்களின் கனவு விருப்பம். ஆனால், அது எல்லோருக்கும் சாத்தியப்படுவதில்லை.
நுழைவுத் தேர்வு இல்லை என்பதால், +2 மதிப்பெண்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. “கட் ஆஃப்’ மதிப்பெண் 200. அதிகபட்சம் 195 மதிப்பெண்களிலேயே அண்ணா பல்கலையில் இடம் நெறஞ்சிடும்.
அடுத்தடுத்த மார்க் எடுத்தவர்களுக்கு அரசு, அரசு மானியம் பெறும் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். இது தவிர தனியார் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களிலும் சீட் கிடைக்கும்.
ஒரு விஷயம் தெரியுமா? நாட்டில் அதிக பொறியியல் கல்லூரிகள் இருக்கும் மாநிலம் ஆந்திரா. ஆனால் இடங்கள் நிரம்புவதிலும், வேலை வாய்ப்பிலும் தமிழக கல்லூரிகளுக்குத்தான் முதலிடம்.
எந்தப் பாடத்திட்டத்தில் படித்தால் அதிக மதிப்பெண்கள் “ஸ்கோர்" செய்ய முடியும்னு கேக்கிறாங்க. எந்தப் பாடத்திட்டம் என்பதெல்லாம் முக்கியமில்லை. மதிப்பெண்கள்தான் அளவுகோல். இருந்தாலும் “சி.பி.எஸ்.இ" யைவிட மாநில கல்வி வாரியம் (ஸ்டேட் போர்டு) நடத்தும் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு.
அடுத்து +2வில், தமிழ் மீடியத்தைவிட, ஆங்கில மீடியம் படிப்பவர்கள் நிறைய மார்க் எடுக்கறதா நெனைக்கிறாங்க. ஒரு விஷயம் சொல்லட்டுமா? தமிழகத்தில் +2 பரீட்சை எழுதுபவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சம். இதில் தமிழ் மீடியம் படித்தவர்கள் 5.6 லட்சம் பேர். அதாவது 70% மீதமுள்ள 30% பேர்தான் ஆங்கில மீடியத்தில் படிக்கிறாங்க.
தமிழ் மீடியத்தில் படிச்சிட்டு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தால் பாடங்களைப் புரிஞ்சுக்கிறது கஷ்டம்னு நெனைக்கிறது தவறு. தாய் மொழியில் படிக்கும்போது பாடங்களைப் புரிஞ்சுக்கிறது ஈஸி. முதலாண்டில் இருக்கும் கொஞ்சம் கஷ்டமும் போகப்போக சரியாயிடும்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் கிராமத்துப் பின்னணியிலிருந்து வந்தவர்தான். தமிழ் மீடியத்துலதான் படிச்சார். பின்னர் நகரக் கல்லூரிகளில் படித்து உலகம் போற்றும் விஞ்ஞானி ஆகவில்லையா? என லாஜிக்காகக் கேட்கும் மன்னர் ஜவகருக்கும் கிராமத்துப் பின்னணி இருப்பது சிறப்பு.
ஆமாம், எனக்குச் சொந்த ஊர் மதுரை மாவட்டம் பாலமேடு. ஜல்லிக்கட்டு நடக்கும் மிக பிரபலமான கிராமம். அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். தமிழ் மீடியம்தான். கல்லூரிக்கு வந்த பின்னர்தான் ஆங்கில வழி கல்வி அறிமுகமாச்சு. பின்னாட்களில் நான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தராக வரவில்லையா? என தன்னைப் பற்றி ரத்தின சுருக்கமாகச் சொல்லும் மன்னர் ஜவகர். தமிழும், ஆங்கிலமும் ஊடக மொழிகள் தானே தவிர, மதிப்பெண் ஸ்கோர் செய்வதற்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்கிற கருத்தையும் பதிவு செய்கிறார்.
ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்து வருபவர்களுக்கு, பொறியியல் சேர்க்கையின்போது பத்து மதிப்பெண்கள் கூடுதலா கொடுக்கப்படுவதாகச் சொல்கிறார்களே? உதாரணமாக ஒரு மாணவர் +2வில் 160 மதிப்பெண் வாங்கியிருந்தால், அது 170 ஆக கணக்கிடப்படும்னு சொல்லப்படுவது உண்மையா?
இல்லை எந்தப் பாடத்திட்டத்தில் +2 முடித்தாலும், அவர்கள் வாங்கியிருக்கும் மார்க் மட்டும்தான் அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்படும். ஒரு விஷயம் தெரியுமா? பொறியியல் அட்மிஷன் தொடங்குவதற்கு முன்பே சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம் மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கு அனுப்பிவிடும். அதனடிப்படையில் பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். மற்றபடி சி.பி.எஸ்.இ.யில் படித்து வரும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகை எதுவும் கிடையாது.
கல்லூரியில் சேரும்போது எந்தப் பாடப் பிரிவை எடுக்கலாம். கடினமாக இருக்குமா. முடித்த பின்னர் வேலை கிடைக்குமா என்கிற குழப்பம் வருவது இயற்கை. முன்பெல்லாம் பொறியியலில் சிவில், மெக்கானிக்கல்னு ரெண்டு பிரிவுகள் தான் பிரதானம். ஆனால் இப்ப எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், “இன்ஸ்ட்ருமெண்டேஷன்’, ரிமோட் சென்சிங்னு... பல புதுப் பிரிவுகள் வந்திருக்கு. அதுல ரெண்டு வகையுண்டு... அதன்படி, பல துறை சார்ந்த வேலைவாய்ப்பு இருக்கும் பாடப்பிரிவு முதல் வகை. அதனை கோர் குரூப் என்பார்கள்... உதாரணமாக, சிவில், மெக்கானிக்கல், இ.சி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ்... இப்படி ஆனால் தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி) கோர் குரூப் பின் கீழ் வராது. காரணம். ஐ.டி. படித்தவர்களுக்கு அந்தத் துறையில் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான். வேலை வாயப்பை உறுதி செய்யும் பாடப்பிரிவின் மீது தான் மாணவர்களின் கவனம் இருக்கும். அதனால் இங்கே குறிப்பிடாத ஒரு சில பாடப் பிரிவுகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுகிறார்கள்! என காரணத்தை அடுக்குகிறார்.
டிப்ஸ்!
* விண்ணப்பங்களை நேரடியாக அண்ணா பல்கலையில் வாங்கலாம். இணைய தளத்தில் விண்ணப்த்தை பதிவிறக்கம் செய்யலாம். வெளியூரில் இருப்பவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பல்கலையின் அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலும் விண்ணப்பங்களைப் பெறலாம். முந்தைய ஆண்டுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் பல்கலையின் இணையதளத்தில் இருக்கும். அதன்மூலம் என்ன கோர்ஸ் கிடைக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.
* சேரப் போகும் கல்லூரியில் அடிப்படை வசதிகள், துறை ஆசிரியர்கள் (ஃபேகல்ட்டி) பற்றி அந்தக் கல்லூரிக்கே நேரடியாகச் சென்று உறுதி செய்யுங்கள்.
* கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மட்டுமே நடக்கும். அப்போது உங்களை அணுகி “கேன்வாஸ்’ செய்யும் இடைத் தரகர்களை தவிர்த்து விடுங்கள்.
* நீங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருந்தால் அதனை விண்ணப்பத்தில் மறக்காமல் குறிப்பிடுங்கள்.
* இட ஒதுக்கீடு (ரிசர்வேஷன்) முறையில் இடங்கள் நிரப்பப்படும் என்பதால் எந்தப் பிரிவில் இடம் கிடைக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும். அதனால் டென்ஷன் வேண்டாம்.
* கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்துக்கு சற்று முன்னதாகவே நேர்காணலுக்குப் போய்விடுங்கள். காரணம் கவுன்சிலிங் முடிவுகள் உடனுக்குடன் அங்கேயிருக்கும் பெரிய திரையில் வெளியிடப்படும். நகத்தை கடித்தபடி எந்த பிரிவை செலக்ட் செய்வது என்கிற குழப்பத்துக்கே அங்கே விடை கிடைக்கும்.
உறுப்புக் கல்லூரிகள்?
1. காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் (சி.இ.ஜி.) கிண்டி.
2. ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர், கிண்டி.
3. மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (எம்.ஐ.ட்டி) குரோம்பேட்டை.
4. ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி. கிண்டி.
கட் ஆஃப் கணக்கிடுவது எப்படி?
பொறியியலுக்கு கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் வாங்கும் மதிப்பெண்கள் மட்டும்தான் கட் ஆஃப்க்கு எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி, கணக்கில் 200க்கு வாங்கும் மார்க்கை நூற்றுக்கு வரும்படி இரண்டால் வகுக்க வேண்டும். ஆனால் இயற்பியல், வேதியியலில் 200க்கு கிடைக்கும் மார்க்குகளை 50க்கு வரும்படி நான்கால் வகுக்க வேண்டும். இவற்றின் கூட்டுத் தொகையில் (100+50+50) கிடைப்பதுதான் “கட் ஆஃப்’ மதிப்பெண். உதாரணமாக, ஒருவர் கணக்கில் 200, இயற்பியல் 198, வேதியியலில் 196 எடுத்திருந்தால், அவரது கட் ஆஃப் 198.5 ஆக இருக்கும்.
இங்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி ! !